< Back
மாநில செய்திகள்
நடுநிலைப்பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
மாநில செய்திகள்

நடுநிலைப்பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

தினத்தந்தி
|
31 March 2023 11:05 PM GMT

நடுநிலைப்பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அந்த துறைக்கான அறிவிப்புகள் வருமாறு:-

* 2 ஆயிரத்து 996 அரசு நடுநிலைப்பள்ளிகள், 540 அரசு உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ரூ.175 கோடி செலவில் அமைக்கப்படும்.

* 7 ஆயிரத்து 500 அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

* 25 மாவட்டங்களில் செயல்பட்டுவரும் மாதிரி பள்ளிகள் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளி என்ற நிலை உருவாக்கப்படும்.

* மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்

* வேலைவாய்ப்புக்காக தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து வரும் பிற மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தங்கள் தாய்மொழியுடன் தங்குதடையின்றி தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக தமிழ்மொழி கற்போம் இயக்கம் தொடங்கப்படும்.

* மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற திறனை ஆசிரியர், பெற்றோர் முன்னிலையில் வெளிப்படுத்தும் வாய்ப்பாக அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டுவிழா நடத்தப்படும்.

* தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

* அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் என்றவகையில், 6 முதல் 8 வகுப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒருவர் என குறைந்தபட்சம் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்.

* அரசு பள்ளிகளில் செயல்பட்டுவரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படும்.

வாழ்வியல் திறன் பயிற்சி

* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் முன்பு 15 நாட்கள் கற்றல், கற்பித்தல் மற்றும் அடிப்படை நிர்வாக பயிற்சி வழங்கப்படும்.

* அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு தேவையான ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.

* வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிப்படியாக 3-ம் பாடப்பிரிவு உருவாக்கப்படும்.

* உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன், விளையாட்டு மற்றும் உடலியல் சார்ந்த செயல்பாட்டுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் உருவாக்கப்படும்.

* அனைத்து அரசு பள்ளிகளிலும் கல்வியாண்டின் தொடக்கத்தில் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை கண்டறிதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும். ஆசிரியர், மாணவர்களுக்கு இதுகுறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.

* அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

* 1 முதல் 12-ம் வகுப்பு வரை, பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்களின் பயன்பாட்டுக்காக மின்னுருப் புத்தகங்கள் உருவாக்கப்படும்.

சிறப்பு எழுத்தறிவு திட்டம்

* சிறைகளில் உள்ள முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத ஆயிரத்து 249 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படும்.

* புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது வழங்கப்படும்.

* நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் மற்றும் அரிய நூல்கள், அறிஞர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் தனி வெளியீடாகவோ, கூட்டு வெளியீடாகவோ கொண்டுவரப்படும்.

* உலகப் புகழ்பெற்ற இலக்கியங்கள் மற்றும் உலக இலக்கியங்களின் எளிமைப்படுத்தப்பட்ட, குழந்தைகளுக்கான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டுவரப்படும்.

* ஐந்து இலக்கியத் திருவிழாக்களுடன் இணைந்து இளைஞர் இலக்கியத் திருவிழா நடத்தப்படும்.

* கன்னிமாரா நூலகத்தில் நவீன வசதிகளுடன் சிறப்பு பிரிவுகள் தொடங்கப்படும்.

* அனைத்து மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் படிப்படியாக புதுப்பிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்