< Back
மாநில செய்திகள்
புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
27 Oct 2022 10:19 AM GMT

புதுமைப்பெண் திட்ட உதவித்தொகை பெற மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

புதுமைப்பெண் திட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.

இதுவரை 2,3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.

தற்போது இந்த வலைத்தளத்தில் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை

இந்த வலைத்தளத்தில் மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் வருகிற 11-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்து பயன்பெறலாம்

விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், சமூக நல இயக்குன்அரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை-91500 56809; 91500 56805; 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இந்த திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்