< Back
மாநில செய்திகள்
இறந்தவர் உடலை விவசாய நிலம் வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு-வாக்குவாதம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

இறந்தவர் உடலை விவசாய நிலம் வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு-வாக்குவாதம்

தினத்தந்தி
|
17 Oct 2023 6:07 PM GMT

தண்டராம்பட்டு அருகே இறந்தவரின் உடலை விவசாய நிலம் வழியே எடுத்துச்செல்ல நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே இறந்தவரின் உடலை விவசாய நிலம் வழியே எடுத்துச்செல்ல நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.

சுடுகாடு

தண்டராம்பட்டு அடுத்த விஸ்வந்தாங்கல் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்தந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தனித்தனியாக சுடுகாடு உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு சுடுகாடு வேறு இடத்தில் உள்ளது.

அவர்கள் இறந்தவர்கள் உடல்களை விவசாய நிலத்தின் வழியாகத்தான் சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த முனியன் (வயது 75) என் முதியவர் இறந்து விட்டார். அவருடைய உடலை விவசாய நிலத்தின் வழியாக டெம்போ வாகனம் மூலம் எடுத்து செல்ல முடிவு செய்திருந்தனர்.

வாக்குவாதம்

இதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிணத்தை நிலத்தின் வழியாக எடுத்துச் செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

போலீசார் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த தாசில்தார் சரளா, துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் நீலா ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் சேமக்கனி, கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து வழக்கம் போல பிணத்தை நிலத்தின் வழியாக எடுத்துச் செல்ல உரிமையாளர்கள் அனுமதி அளித்தனர். பின்னர் உறவினர்கள் பிணத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்