< Back
மாநில செய்திகள்
ரூ.85 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

ரூ.85 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

தினத்தந்தி
|
20 March 2023 6:45 PM GMT

திண்டிவனத்தில் ரூ.85 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகம் அருகில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்நிறுவனத்தை திண்டிவனம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது 45) என்பவர் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 10 மாதம் கழித்து ரூ.90 ஆயிரமும், ரூ.1 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ரூ.2 லட்சம் செலுத்தினால் ரூ.3 லட்சத்து 60 ஆயிரமும் வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தினர் ஆசைவார்த்தை கூறினர்.

இதனை நம்பிய திருவண்ணாமலை மாவட்டம் வேளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மண்ணுலிங்கம் (51) மற்றும் அவருக்கு தெரிந்த 8 பேர் சேர்ந்து மொத்தம் ரூ.55 லட்சத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் அந்நிறுவனத்தினர் ஏமாற்றிவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தனியார் நிர்வாக இயக்குனர்கள் மாயகிருஷ்ணன், மஞ்சுளா, மாயகிருஷ்ணன் மனைவி பிரபாவதி மற்றும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கவுதம், மதிவாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார், அன்பு ஆகிய 9 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுபோன்று 7 ஆயிரம் பேரிடம் இருந்து அவர்கள் மொத்தம் ரூ.85 கோடி வரை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக மாயகிருஷ்ணன் உள்பட 6 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் திண்டிவனத்தில் பதுங்கி இருந்த மதிவாணன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்