< Back
மாநில செய்திகள்
அண்ணா பிறந்தநாள் நெடுந்தூர ஓட்டப்போட்டி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

அண்ணா பிறந்தநாள் நெடுந்தூர ஓட்டப்போட்டி

தினத்தந்தி
|
4 Oct 2023 6:56 PM GMT

ராணிப்பேட்டையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

அண்ணா பிறந்த நாள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் சார்பாக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது. இதில் 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் என தனித்தனியே நடத்தப்பட உள்ளது.

நெடுந்தூர ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக சி.பிளாக்கில் முதல் தளத்தில் உள்ள அறை எண் 1-ல் தங்களின் பெயரினை பதிவு செய்து, ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் ரத்தப்பிரிவு போன்ற தகவல்களை அளித்து, உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். போட்டி நடைபெறும் அன்று வீரர்கள் காலை 5.30 மணிக்குள் தங்களது வருகையினை உறுதி செய்ய வேண்டும்.

பரிசு, சான்றிதழ்

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களுடன் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000, நான்காவது இடம் முதல் 10-வது இடம் வரை தலா ரூ.1,000 வீதம் அனைத்து பிரிவிற்கும் வழங்கப்பட உள்ளது.

பரிசுத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் மட்டுமே வழங்கப்படும். ஆகவே வெற்றி பெற்றவர்கள் தங்களின் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்