< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு
அரியலூர்
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
17 Aug 2023 7:05 PM GMT

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி எதிரே உள்ள காளான் பண்ணைக்கு சொந்தமான கிணற்றில் நேற்று மதியம் மூதாட்டி ஒருவா் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதனைக்கண்ட காளான் பண்ணை உரிமையாளர் குணசேகர் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்களை வரவழைத்து கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மூதாட்டியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிணற்றில் இறந்த மூதாட்டி யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், கிணற்றில் இறந்து கிடந்தவர் சிறுவாச்சூர் கிழக்கு தெருவை சேர்ந்த முத்துசாமியின் மனைவி காசியம்மாள் (வயது 80) என்பது தெரியவந்தது. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் இருந்தனர். இதில், ஒரு மகள் இறந்து விட்டார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மூதாட்டியை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் கிணற்றில் இறந்து கிடப்பதாக தகவலறிந்த காசியம்மாளின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து உடலை பார்த்து இறந்து போனது காசியம்மாள் தான் என்பதை உறுதி செய்தனர். காசியம்மாள் கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்