< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி

தினத்தந்தி
|
20 May 2022 11:52 PM GMT

ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து விரைவில் வழங்கப்படும் என்று விழுப்புரத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

கூடுதல் பொருட்கள்

விழுப்புரத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் இந்த ஓராண்டில் 110 விதியின் கீழ் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்று பட்டியலிட்டு முதல்-அமைச்சர் கூறியுள்ளார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி ரேஷன் கடைகள் ஒரு துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். மேலும் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும்.

பயோ மெட்ரிக் திட்டம்

பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாததால், இனி கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும். 500 டன் அரைக்கும் அரிசி ஆலை 6-ம், 800 டன் அரைக்கும் ஆலை 3-ம், 200 டன் அரைக்கும் ஒரு தனியார் ஆலையும் நிறுவப்படும்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் கூரை அமைக்கப்பட்டு அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்