< Back
மாநில செய்திகள்
மாதவரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மாதவரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

தினத்தந்தி
|
6 Oct 2023 9:22 AM GMT

மாதவரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் மீது கன்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

புழல் காந்தி பிரதான சாலையை சேர்ந்தவர் லூயிஸ் ஜோசப் ராஜ் (வயது 45). இவர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர், நேற்று காலை தன்னுடைய மகனை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டு விட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். புழல் வடபெரும்பாக்கம் சாலையில் திருமண மண்டபம் அருகே வந்தபோது, அதே திசையில் வந்த கன்டெய்னர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இத்திலேயே பரிதாபமாக துடித்துடித்து இறந்தார். இதுகுறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் லூயிஸ் ஜோசப் ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலையைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் முத்து (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்