< Back
மாநில செய்திகள்
தமிழக-கர்நாடக எல்லையில் கரும்பு லாரியை வழிமறிக்கும் யானை...!
மாநில செய்திகள்

தமிழக-கர்நாடக எல்லையில் கரும்பு லாரியை வழிமறிக்கும் யானை...!

தினத்தந்தி
|
23 July 2022 2:44 PM GMT

தமிழக-கர்நாடக எல்லையில் கரும்பு லாரிகளை யானைகள் வழி மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் குட்டிகளுடன் உலா வரும் யானைகள் கரும்பு லாரியை வழி மறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரியின் டிரைவர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

பின்னர், லாரியில் உள்ள கரும்புகளை யானைகள் துதிக்கையால் எடுத்து சுவைக்க தொடங்கியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது லாரியின் டிரைவர் கரும்புகளை எடுத்து சாலையோரம் எரிந்ததை தொடர்ந்து யானைகள் லாரியை விட்டு விலகி சென்றனர். இதனை பயன்படுத்தி டிரைவர் லாரியை அங்கிருந்து எடுத்து சென்றார்.

மேலும் செய்திகள்