< Back
மாநில செய்திகள்
பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது
நாமக்கல்
மாநில செய்திகள்

பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது

தினத்தந்தி
|
8 Feb 2023 6:31 PM GMT

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே மேட்டுக்காடு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கோவில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று பக்தர்கள் அலகுகுத்தியும், கரகம் எடுத்து கொண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்கள் வேண்டுதலின் நிறைவேற்றுவதற்காக தீ மிதித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலையில் எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. 20-க்கும் மேற்பட்ட எருமை கிடாக்களை நேர்த்திகடனாக பக்தர்கள் கோவிலுக்கு வழங்கினர்.

இந்த எருமைக் கிடாக்களின் மீது கோவில் பூசாரி தண்ணீரை தெளித்தார். முதலில் எருமை கிடாவை ஒருவர் ஆக்ரோஷமாக வெட்டினார். கோவிலின் அருகில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் அந்த எருமை கிடாவை போட்டு மூடினர். இதுபோன்ற நிகழ்வு கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர். இதனை பார்ப்பதற்காக ராசிபுரம், மேட்டுக்காடு, பட்டணம், குச்சிக்காடு, புதுப்பாளையம், வடுகம், காக்காவேரி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள், விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்