< Back
மாநில செய்திகள்
நாமக்கல் கணபதி நகர்  அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா  பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் கணபதி நகர் அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்

தினத்தந்தி
|
21 May 2022 4:38 PM GMT

நாமக்கல் கணபதி நகர் அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கணபதி நகரில் அழகுமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், கருப்பண்ணசாமி, நாகதேவி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் 6 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு, கோவில் திருவிழா நடத்த நிர்வாகிகள், பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 9-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி மறுகாப்பு கட்டப்பட்டது.

விழாவில் நேற்று மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. நாமக்கல்- –மோகனூர் சாலை குன்னிமரத்தான் கோவில் அருகில் இருந்து ஊர்வலமாக தீர்த்தக்குடம் எடுத்து செல்லப்பட்டது. மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பால் குடம் எடுத்தும், அழகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் பக்தர்கள், அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மாலையில் கரகாட்டத்துடன், மாவிளக்கு பூஜை, வாண வேடிக்கை நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, 6 மணிக்கு கம்பம் பிடுங்கி நீர் நிலையில் விடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மேலும் செய்திகள்