< Back
மாநில செய்திகள்
அம்மா உணவகங்களை மூடுவதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மாநில செய்திகள்

அம்மா உணவகங்களை மூடுவதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தினத்தந்தி
|
12 Jan 2023 10:06 PM GMT

அம்மா உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறி உள்ளார்.

சென்னை,

தினந்தோறும் லட்சக்கணக்கான ஏழை, எளியவர்கள் பயன்பெற்று வரும் அம்மா உணவகத்தை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது.

சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டிக்கு உட்பட்ட மணியனூர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 6 பேரை பணியிலிருந்து அகற்றிவிட்டு தி.மு.க.வினருக்கு வேண்டியவர்களை பணியமர்த்த முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி சார்பில் எவ்வித நிதியுதவியும் அளிக்கப்படாத நிலையில், அங்கு பணிபுரியும் மகளிர் தங்களுடைய பணத்தை போட்டு அம்மா உணவகத்தை நடத்தி வரும் நிலையில் மாமன்ற உறுப்பினருக்கும், தனக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என சேலம் மாநகர தி.மு.க. மண்டலக் குழுத் தலைவர் கோருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

தி.மு.க.வினர் தலையீடு

அம்மா உணவகம் இயங்கும் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால், அதை புதிதாக கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கட்டிட பணிகள் முடியும் வரை அவர்களை வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், மணியனூர் அம்மா உணவகம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க.வினரின் வற்புறுத்தலின் பேரில், சேலத்தில் மேலும் சில அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

உண்மையிலேயே, அம்மா உணவகம் அமைந்திருக்கும் கட்டிடம் சிதிலமடைந்திருந்தால் அதனை அருகில் உள்ள வேறு கட்டிடத்திற்கு மாற்றிவிட்டு, புதிதாக கட்டிடப் பணிகளை தொடங்குவதுதான் முறையாக இருக்கும்.

கண்டனம்

மாறாக, அம்மா உணவகத்தையே மூடுவது என்பது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு சமம். இது அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்