< Back
மாநில செய்திகள்
அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

தினத்தந்தி
|
30 May 2023 6:45 PM GMT

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் ஆகியோர.முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் கலெக்டர் பேசியதாவது:- அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழிலாளர்களை தொழிலதிபராக உருவாக்குவதற்கும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும், புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அற்புதமான திட்டமாகும். திட்டத்தில் பயனாளிகள் தங்களது பங்காக நிதி செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதி தேவையில்லை. 100 சதவீதம் மானியமாக அதாவது மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கிக்கடனாகவும், 35சதவீதம் அரசின் பங்காகவும் முன்முனை மானியமாக வழங்கப்படுகிறது.

வங்கி மேலாளர்களுக்கு பாராட்டு

இத்திட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்கு மட்டுமல்லாமல் ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் சாதிச்சான்றிதழ், ஆதார்அட்டை, திட்ட அறிக்கை, விலைப்புள்ளி ஆகியவற்றுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் பெருவாரியாக வசித்து வருகின்றனர். குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் 90 சதவீதம் வசித்து வருகின்றனர். எனவே அனைவரும் இத்திட்டதை பற்றி நன்கு அறிந்து பயன்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் அரசு திட்டங்களில் சிறப்பாக கடன் வழங்கிய வங்கி மேலாளர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கினார்.

இதில் இதழ் டெய்ட்கோ பவுண்டேசன் தலைவர் சுந்தரவடிவேல், குறு சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் பிரம்மதேவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) கதிர்சங்கர், மேலாளர் அனந்தமோகன், மாவட்ட தொழில் மைய திட்ட அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட தொழில் மைய உதவிப்பொறியாளர் சிவநாதன் மற்றும் பழங்குடியின சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்