< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க.வுடன் கூட்டணியா...? டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்...?
மாநில செய்திகள்

அ.தி.மு.க.வுடன் கூட்டணியா...? டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்...?

தினத்தந்தி
|
14 Nov 2022 10:46 AM GMT

‘தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்பட வேண்டும் என டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கட்சிக்கான பிரத்யேக இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வை எதிர்ப்பதற்காக வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் அல்லது எந்த ஒரு தேர்தலிலும் கூட்டணி அமைப்போம். ஆனால் அ.தி.மு.க. என்ற கட்சி செயல்படாத நிலையில் உள்ளது . தேர்தல் வந்தால் ஒரு கட்சிக்கு ஏ மற்றும் பி பார்ம் தர வேண்டும் இன்று அ.தி.மு.க.வின் நிலைமை மோசமாக உள்ளது.

அதேநேரம் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அதிமுக பற்றி பேசுவதற்கு கருத்து ஒன்றும் இல்லை.

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்ற பேரறிஞர் அண்ணாவின் நிலைப்பாடே அமமுகவின் நிலைப்பாடு. சனாதனம், பாரத், அரசமைப்பு சட்டத்தை விட பெரியது பாரத் என்றெல்லாம் ஆளுநர் பேச வேண்டியதில்லை.

வேறு வேலையில்லாமல் ஆளுநர் பேசுகிறார். அவர் பேசுவதை அவர் வீட்டில் உள்ளவர்களே கேட்கமாட்டார்கள்.

'தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்பட வேண்டும்.

நளினி உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்கிறோம்;

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டு நலன் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுப்போம்;அனைத்து விஷயங்களிலும் எதிர்த்து பேசுவது முறையானது அல்ல.

தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணியில் இணைய தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 'கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி செல்ல நான் தயாராகவே இருந்தேன். அந்த தேர்தலில் 40 இடங்கள் கேட்டேன். ஆனால் அவர்கள் கொடுக்க தயாராக இல்லை. குறிப்பாக கட்சியில் உள்ள சிலர் பதவி ஆசையால் அது நடக்காமல் போய்விட்டது' என்று பதிலளித்தார்.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் ஒரு அணிலைப்போல் அமமுக பங்கு இருக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்