< Back
மாநில செய்திகள்
வளசரவாக்கம், சேலையூர், வண்டலூர் உள்பட 20 இடங்களில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்
மாநில செய்திகள்

வளசரவாக்கம், சேலையூர், வண்டலூர் உள்பட 20 இடங்களில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்

தினத்தந்தி
|
16 Jun 2022 11:51 PM GMT

வளசரவாக்கம், சேலையூர், வண்டலூர் உள்பட 20 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச்செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களை திறந்துவைத்தார்.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாளுவதில் காவல் துறைக்கு உதவி செய்யும் முதன்மை நோக்கத்துடன் கடந்த 1973-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலில் மகளிர் காவல் பணியில் நியமிக்கப்பட்டனர். சட்டம்-ஒழுங்கை பராமரித்தல், குற்றங்களை தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் மகளிர் போலீசார் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

வளசரவாக்கம், சேலையூர், வண்டலூர்

தற்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-22-ம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை வளசரவாக்கம், சேலையூர், ஆவடி எஸ்.ஆர்.எம்.சி., வண்டலூர், வேலூர் மாவட்டம் காட்பாடி, திருவண்ணாமலை ஊரகம், கடலூர் மாவட்டம் திட்டக்குடி, கரூர் ஊரகம்,

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம்,

திண்டுக்கல் ஊரகம், தேனி மாவட்டம் பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் புளியங்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களை முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்