< Back
மாநில செய்திகள்
அகிலாண்டேஸ்வரி-சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அகிலாண்டேஸ்வரி-சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
4 April 2023 6:29 PM GMT

அன்னவாசல் அருகே உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.

தேரோட்டம்

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த குடவரைக்கோவிலான பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மண்டகபடிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர்- அகிலாண்டேஸ்வரியை தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து மேள, தாளம் முழங்க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.

தீபாராதனை

தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்