< Back
மாநில செய்திகள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் தொடர்ந்த வழக்கு - போலீசார் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் தொடர்ந்த வழக்கு - போலீசார் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
10 Aug 2023 2:38 PM GMT

முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க கோரி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பணிப்பெண் தொடர்ந்த வழக்கில் போலீசார் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் திருடு போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரியை கைது செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஈஸ்வரி மற்றும் அவரது மகள்கள் பிருந்தா, மஞ்சுளா ஆகியோரது வங்கி கணக்குகளை முடக்கி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மந்தவெளி கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்கள் மூவரும் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில் தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்துள்ள வங்கி கணக்குகளை முடக்கியதால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்த வாய்ப்பும் வழங்காமல் இயற்கை நியதிக்கு முரணாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தேனாம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.


மேலும் செய்திகள்