< Back
மாநில செய்திகள்
சேதம் அடைந்த கட்டிடத்தில் இயங்கும் வேளாண் விரிவாக்க மையம்
திருவாரூர்
மாநில செய்திகள்

சேதம் அடைந்த கட்டிடத்தில் இயங்கும் வேளாண் விரிவாக்க மையம்

தினத்தந்தி
|
23 Jun 2023 6:45 PM GMT

முத்துப்பேட்டை அருகே எடையூரில் சேதம் அடைந்த கட்டிடத்தில் வேளாண் விரிவாக்க மையம் இயங்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே எடையூரில் சேதம் அடைந்த கட்டிடத்தில் வேளாண் விரிவாக்க மையம் இயங்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வேளாண் விரிவாக்க மையம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் நெல் சாகுபடி முதன்மையாக செய்யப்பட்டு வருகிறது. இதற்காக முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு வேளாண்மை உதவி அலுவலகம் இயங்கி வருகிறது. அதேபோல உதயமார்த்தாண்டபுரம், எடையூர் ஆகிய இடங்களில் கிளை வேளாண் விரிவாக்க மையங்கள் இயங்கி வருகின்றன.

இதில் எடையூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் கடந்த 1970-ம் ஆண்டு கட்டப்பட்டது. மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கும் இந்த மையத்துக்கு 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மானியம் பெறுவதற்கும், பயிர்க்காப்பீடு, வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் போன்ற உதவிகள் பெறுவதற்கும் வந்து செல்கிறார்கள்.

சேதம் அடைந்த கட்டிடம்

இந்த நிலையில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தின் மேல் பகுதி மற்றும் சுவர்களில் மரக்கன்றுகள் முளைத்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் மையத்துக்குள் கசிந்து அங்கு வைக்கப்பட்டுள்ள விதைகள், உரங்கள் நனைந்து வீணாகி வருகிறது.

இந்த கட்டிடம் தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைக்காலத்தில் கட்டிடத்தை சுற்றி தண்ணீர் தேங்குகிறது. சேதம் அடைந்த இந்த கட்டிடத்தின் பல பகுதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு வேளாண் விரிவாக்க மையத்துக்கு சகல வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்