< Back
மாநில செய்திகள்
முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு மனு விசாரணை 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு
விழுப்புரம்
மாநில செய்திகள்

முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு மனு விசாரணை 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
19 July 2023 6:45 PM GMT

முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு மனு விசாரணை 2-ந்தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.

முன்னாள் முதல்-அமைச்சர் சுற்றுப்பயணத்தின்போது கடந்த 2021-ம் ஆண்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீதும், அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து கார் சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சார்பில் அவரது வக்கீல் ஹேமராஜன் ஜூன் 22-ந் தேதியும், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. சார்பில் அவரது வக்கீல் ரவீந்திரன் கடந்த 5- ந் தேதியும் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 2ந்தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்