பெரம்பலூர்
ரூ.19½ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
|அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.19½ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரி பெண் புகார் அளித்தார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, தெற்கு தியாகனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ஆறுமுகம். இவரது மகள் நித்யா(வயது 32). எம்.எஸ்.சி., பி.எட். படித்துள்ள இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவியை நேற்று சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், அரசு வேலைக்கு முயற்சி செய்து வரும் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.
கடந்த 2018-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெருநிலா கிராமத்தை சேர்ந்த ஒருவர் திருமண தரகர் என்று கூறி எங்கள் குடும்பத்தில் அறிமுகம் ஆனார். மேலும் அவர் எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் அரசு வேலை வாங்கினால் தான் திருமணம் நடக்கும் என்று கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி எனது பெற்றோரிடம் ரூ.19 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் என்னுடைய கல்வி சான்றிதழை வாங்கிக்கொண்டார். ஆனால் அவர் இதுவரை அரசு வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும், கல்வி சான்றிதழையும் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக எனது குடும்பத்தினர் அவரிடம் கேட்டதற்கு, அவரும், அவரது மனைவியும் சேர்ந்து எனது தந்தை, தாய், தம்பியை தாக்கினர். இது தொடர்பாக எனது தாய் கொடுத்த புகாரின்பேரில், அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் எங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் இருந்து பணத்தையும், கல்வி சான்றிதழையும் திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கை.களத்தூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.