< Back
மாநில செய்திகள்
சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது விபத்து - பள்ளி மாணவி உயிரிழப்பு
மாநில செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது விபத்து - பள்ளி மாணவி உயிரிழப்பு

தினத்தந்தி
|
15 Aug 2022 2:44 PM GMT

தாம்பரம் அருகே சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது பள்ளி மாணவி மீது அரசு பஸ் மோதி விபத்துக்கு உள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாம்பரம்,

தாம்பரம் அடுத்த நெமிலிச்சேரி, தனபால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (வயது 17). இவர் சிட்லபாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று காலை பள்ளியில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சைக்கிளில் சென்றிருந்தார்.

பள்ளியில் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் தனது வீட்டிற்கு திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது அஸ்தினாபுரம் சென்ற அரசு பஸ் அவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் நிலைத்திடுமாறு கீழே விழுந்த மாணவி லட்சுமி ஸ்ரீ தலையின் மீது பஸ்ஸின் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சிட்லபாக்கம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் தேவகுமார் (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்