< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

தினத்தந்தி
|
1 Aug 2022 10:06 AM GMT

திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று நடைபெற்றது. ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு பால் பழம் பஞ்சாமிர்தம் தேன் இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தங்க கவச அலங்காரம் முருகப்பெருமானுக்கு செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைப்பெற்றது.

ஆடிப்பூர விழாவை ஒட்டி, சென்னை, வண்ணாரபேட்டை, தண்டையார் பேட்டை, கொருக்குபேட்டை, மண்ணடி, புளியந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று இரவே, திருத்தணிக்கு வந்து தேவஸ்தான குடில்கள், தனியார் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கி இருந்தனர்.

இன்று காலை 8 மணி முதல், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடல் முழுவதும் அலகு குத்தியும், மலர் மற்றும் மயில்காவடிகள் எடுத்து, பம்பை, உடுக்கை முழங்க கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் மொட்டையடித்து சரவணபொய்கையில் புனித நீராடினர்.

பின்னர் மலைப்படிகள் வழியாக சென்று மூலவரை தரிசித்தனர். மேலும் சில பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றும் வழிபட்டனர். காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்களில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆடிப்பூர திருவிழாவில் கலந்துக்கொள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க 3 மணி நேரமும், சிறப்பு வழியில் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் உத்தரவின் பேரில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்