< Back
மாநில செய்திகள்
வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை
மாநில செய்திகள்

வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
16 April 2024 11:56 PM GMT

வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராமலட்சுமி நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சண்முகசுந்தரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

பள்ளிக்கூடத்திற்கு விடுமுறையை முன்னிட்டு தனது 2 குழந்தைகளையும் நெல்லை அருகே கோட்டூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு ராமலட்சுமி அனுப்பி வைத்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் ராமலட்சுமி தனியாக தூங்கிக்கொண்டு இருந்தார். அதிகாலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களின் சத்தம் கேட்டு விழித்த ராமலட்சுமி அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட முயன்றார்.

உடனடியாக அந்த கும்பல் ஸ்குரு டிரைவரை காட்டி மிரட்டி அவரின் வாய் மற்றும் கைகளை கயிற்றால் கட்டினார்கள். பின்னர் வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்