< Back
மாநில செய்திகள்
மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி

தினத்தந்தி
|
26 July 2023 6:17 PM GMT

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர் வட்டாரத்தில் உள்ள பயனாளிகளுக்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24-ம் நிதி ஆண்டிற்கு மாடித்தோட்ட காய்கறி விதைகள் தொகுப்புகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மணிமேகலை தலைமையில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி, தோட்டக்கலைத்துறை அலுவலர் செல்வகுமார், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் அருட்செல்வன் மற்றும் மாடித் தோட்ட முன்னோடி பயனாளி உதயபானு ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு மாடித் தோட்ட காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாடித்தோட்ட காய்கறி தொகுப்பில் செடி வளர்ப்பு பைகள் 6, இரண்டு கிலோ தென்னை நார்கழிவு, ஆறு வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம் 200 மில்லி, பாஸ்போ பாக்டீரியா 200 மில்லி, டிரைக்கோடெர்மா 200 கிராம், வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் வளர்ப்பு முறைக்கான கையேடு ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் ரூ.450 செலுத்தி வாங்கி சென்றனர். ஒரு பயனாளிக்கு 2 தொகுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் வழங்கப்பட்டு வருவதால் தேவைப்படுவோர் ஆதார் நகல் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு கரூர் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு கரூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்