< Back
மாநில செய்திகள்
சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
13 Oct 2023 6:45 PM GMT

நன்னிலம் அருகே சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்னிலம்:

நன்னிலம் அருகே சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து அதிகமான சாலை

நன்னிலம் அருகே திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் காக்கா கோட்டூர் பகுதி உள்ளது. இப்பகுதியில் அரசு விதைப்பண்ணை, வேளாண்மை அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை கூடம் உள்ளது. இதனால் இந்த பகுதியில் மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

மேலும் இந்த சாலையில் எந்த நேரமும் கார், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். தற்போது இந்த சாலை அகல படுத்தப்படுவதால் மேலும் வாகன போக்குவரத்து அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் காக்கா கோட்டூர் கடை தெருவில் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடம் உள்ளது.

வேகத்தடை வேண்டும்

அதாவது அந்த சந்திப்பில் ஆனை கோவிலில் இருந்து வரும் சாலை மற்றும் ஓமக்குளம் மூங்கில் குடிசாலை சந்திக்கின்றன. இந்த இரு சாலைகள் சந்திக்கும் இடத்தில் பொது மக்கள் ரோட்டை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களில் ஆறு விபத்துகள் நடந்துள்ளது. எனவே இந்த விபத்தை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட அந்த சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்