< Back
மாநில செய்திகள்
ஆவின் பால் முகவருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி
மாநில செய்திகள்

ஆவின் பால் முகவருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
15 July 2023 7:50 PM GMT

ஆவின் பால் முகவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அரிவாள் வெட்டு

ஸ்ரீரங்கம் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் ஆவின் பால் விற்பனை செய்யும் முகவராக உள்ளார். நேற்று முன்தினம் மதியம் ராகவேந்திரா மடம் அருகே இவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அவரை அரிவாளால் வெட்டியதாக தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை

*திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மனைவி வசந்தி(56). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

*கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சாரக்குப்பம் அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் சேகர்(50). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர், ராஜபாளையத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல பஸ்சில் வந்தார். திருச்சி மாவட்டம், சிறுகனூரை அடுத்த சனமங்கலம் வனப்பகுதி அருகே வந்தபோது பஸ்சில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் கண்ணாடி உடைப்பு

*கர்நாடக மாநிலம். பெங்களூரு மாவட்டம், வசந்தபுரத்தில் தனது அண்ணன் மகனான சங்கருடன் வசித்து வருபவர் சரஸ்வதி(72). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புள்ளம்பாடி வந்து, சங்கரின் வீட்டில் குடியிருந்து வந்தார். இந்நிலையில் ஓட்டலுக்கு சென்றபோது மயங்கி விழுந்த சரஸ்வதி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

*திருச்சி பொன்மலைப்பட்டி இளங்கோ தெருவை சேர்ந்த ஜஸ்டின் ராஜின் மகளான கல்லூரி மாணவி ரீனா(21) மாயமானார்.

*கரூர் மாவட்டம் குளித்தலை சேகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(32), நேற்று முன்தினம் காலை ஸ்ரீரங்கத்துக்கு காரில் வந்தார். அப்போது ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கோபிநாத்(28) காரை அந்த பகுதியில் நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்ணாடியை அடித்து உடைத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.

*திருச்சி எடமலைப்பட்டி புதூர் நாதர்நகர் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில்(28). இவரை கட்டையால் தாக்கியதாக இந்திராநகர் பகுதியை சேர்ந்த அர்ஜூலை(22) போலீசார் கைது செய்தனர்.

*வைரிசெட்டிப்பாளையம் டாஸ்மாக் கடையினருகில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கமும் இணைந்து, அந்த கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் உப்பிலியபுரம் டாஸ்மாக் கடையின் முன்பு புதிய தமிழகம் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

*திருச்சி பாலக்கரை பகுதியில் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த பயணியிடம் செல்போனை பறித்த வழக்கில் கைதான சதீஷ்குமாரை(24) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார்.

*மணப்பாறையை அடுத்த மாலைப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேலின் மனைவி கவுசல்யா(22). இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று கவுசல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்