பெரம்பலூர்
வயலில் மஞ்சள் குலைகளுக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பு
|வயலில் மஞ்சள் குலைகளுக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
மஞ்சள் குலை அறுவடை
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பஜனைமேடு தெருவை சேர்ந்தவர் புகழேந்தி(வயது 45). விவசாயி. இவர் குரும்பலூரில் ஆலடியான் கோவில் செல்லும் சாலையில் உள்ள தனது வயலில் மஞ்சள் சாகுபடி செய்திருந்தார். நேற்று காலை பெண் தொழிலாளர்களை கொண்டு மஞ்சள் குலைகளை அறுவடை செய்யும் பணியில் புகழேந்தி ஈடுபட்டார்.
அப்போது மஞ்சள் குலைகளுக்கு இடையே ஒரு மலைப்பாம்பு பதுங்கியிருந்தது. அதைக்கண்ட பெண் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து புகழேந்தி பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அதை பிடிக்க முடியாத நிலையில், இது பற்றி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பிடிபட்டது
இதையடுத்து தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் ராமன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரை மணி நேரம் போராடி மஞ்சள் குலைகளுக்குள் பதுங்கியிருந்த சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனால் பெண் தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை கொண்டு சென்று காப்பு காட்டில் விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.