< Back
மாநில செய்திகள்
பெரியமேடு விடுதியில் தனியார் நிறுவன ஊழியர் கொலை கள்ளக்காதலி கைது
மாநில செய்திகள்

பெரியமேடு விடுதியில் தனியார் நிறுவன ஊழியர் கொலை கள்ளக்காதலி கைது

தினத்தந்தி
|
9 March 2023 9:55 PM GMT

சென்னை பெரியமேடு விடுதியில் தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 41). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பிரகாசுக்கும், கொசப்பேட்டை சின்னதம்பி தெருவைச் சேர்ந்த பிரியா (42) என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் பெரியமேடு ஆர்.எம்.சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கினர். அங்கு அறையில் பிரகாஷ் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக பிரியா, விடுதி மேலாளர் கபீருக்கு தகவல் தெரிவித்தார்.

பிரியா கைது

தகவல் அறிந்த கபீர், அந்த அறைக்குச் சென்று பார்த்தார். அப்போது அங்கு பிரகாஷ் இறந்து கிடந்துள்ளார். உடனே அவர், பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரகாஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பிரியாவை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சம்பவத்தின்போது பிரகாசும், பிரியாவும் மதுபோதையில் இருந்ததும், அப்போது ஏற்பட்ட தகராறில் பிரியா பிரகாசை தாக்கியதும், தாக்குதலில் காயமடைந்த பிரகாஷ் மயங்கி விழுந்து இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரியாவை கைது செய்தனர்.

திருமணம் ஆகவில்லை

இறந்த பிரகாசுக்கு திருமணம் ஆகவில்லை. பிரியாவுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். பிரியா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரது கணவரை விட்டு பிரிந்து பல ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். பிரகாசுக்கும், பிரியாவுக்கும் ஓட்டேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வைத்து பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கமே இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்