< Back
மாநில செய்திகள்
வெளிச்சந்தை விலை உயர்வை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை
சென்னை
மாநில செய்திகள்

வெளிச்சந்தை விலை உயர்வை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை

தினத்தந்தி
|
7 Sep 2022 9:05 AM GMT

வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகம் இருந்து வரும் நிலையில், அங்கு பருவமழை வெளுத்து வாங்குவதால் அதன் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் சென்னையில் தக்காளிவரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலை ஏறுமுகத்தில் செல்ல தொடங்கி உள்ளது. கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

இந்த நிலையில் தக்காளி விலை மேலும் உயரக்கூடும் என்று வியாபாரிகள் கருதுகிறார்கள். தற்போது வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தக்காளி விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.), சிந்தாமணி, நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி தற்போது ரூ.40 முதல் 42 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையை விட மிகவும் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதால் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதை காண முடிகிறது.


மேலும் செய்திகள்