< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் தகராறு செய்த கணவர் கட்டையால் அடித்துக்கொலை
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

குடிபோதையில் தகராறு செய்த கணவர் கட்டையால் அடித்துக்கொலை

தினத்தந்தி
|
4 July 2023 7:28 PM GMT

வாலாஜா அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.

லாரி மெக்கானிக்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வீ.சி.மோட்டூர் மிட்டாய்கார தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40), லாரி மெக்கானிக். இவரது மனைவி பானுமதி (34). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தேவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினமும் அவர் குடித்துவிட்டு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தார்.

இதனால் வேதனையடைந்த பானுமதி கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுடன் சின்ன தகரகுப்பத்தில் உள்ள தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். அதன்பின்னரும் போதையில் தேவராஜ் அங்கு சென்று குடும்பத்தினரிடம் தகராறு செய்து துன்புறுத்தி வந்தார்.

உருட்டுக்கட்டை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல மது அருந்திவிட்டு போதையில் மனைவியுடன் தேவராஜ் தகராறு செய்தார். அப்போது திடீரென அவர் பாறாங்கல்லை தூக்கி மனைவி மீது போட வந்தார். அதிர்ச்சியடைந்த பானுமதி அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தலையில் ஓங்கி அடித்தார். இதில் மயங்கி விழுந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வாலாஜா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், அவர்கள் விரைந்து வந்து தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து பானுமதியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்