< Back
மாநில செய்திகள்
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
3 Sep 2022 7:12 PM GMT

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற (ஆண், பெண்) குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்திடவும், தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காகவும் அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த ரூ.75 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கும், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 10 பேரை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேற்காணும் திட்டத்தில் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்