< Back
மாநில செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே குட்டையில் மூழ்கி விவசாயி சாவு
அரியலூர்
மாநில செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே குட்டையில் மூழ்கி விவசாயி சாவு

தினத்தந்தி
|
11 July 2023 7:07 PM GMT

ஜெயங்கொண்டம் அருகே குட்டையில் மூழ்கி விவசாயி இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விவசாயி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருேக உள்ள அணைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவருடைய மகன் அம்சவிருத்தன் (வயது 26), விவசாயி. இவருக்கும் இடையார் கிராமத்தை சேர்ந்த கந்தன்-ஜோதி மகள் விஜயலட்சுமி (23) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அம்சவிருத்தன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவார். இதனால் அம்சவிருத்தன் அவ்வப்போது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியையும், குழந்தையையும் பார்த்து வருவது வழக்கம்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் நேற்று கழுவந்தோண்டி கோகிலாங்குட்டையில் அம்சவிருத்தன் உள்ளிட்ட சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அம்சவிருத்தன் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அம்சவிருத்தனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் 1 மணி நேரம் கழித்து அவர் பிணமாக மீட்கப்பட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அம்சவிருத்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திடீர் மறியல்

இதற்கிடையே அம்சவிருத்தன் உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், அம்சவிருத்தனை சிலர் தற்கொலைக்கு தூண்டியுள்ளதாகவும், அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவம் காரணமாக ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் அணைக்குடம் கிராமத்திலும் அம்சவிருத்தன் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்