
புதுக்கோட்டை
பார்வையற்ற கல்லூரி மாணவரை 'டிக்கெட்' எடுக்கக்கூறிய கண்டக்டர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் பார்வையற்ற கல்லூரி மாணவரை ‘டிக்கெட்’ எடுக்கக்கூறிய கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் முகமதுரபீக். இவரது மகன் முகமதுபாசில் (வயது 20). இவருக்கு பிறவியிலேயே 2 கண்களும் தெரியாது. இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதையொட்டி தினமும் முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை கல்லூரிக்கு அரசு பஸ்சில் சென்று வருவது வழக்கம். நேற்று வழக்கம்போல் காலை கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் மதியம் புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் வழியாக மணப்பாறை சென்ற அரசு பஸ்சில் ஏறியுள்ளார். பின்னர் முகமதுபாசில் கண்டக்டரிடம் அடையாள அட்டையை காண்பித்து காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அவர் டிக்கெட் வாங்க வேண்டும். இல்லையென்றால் கீழே இறக்கி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவன் முகமது பாசில் பணம் கொடுத்து டிக்கெட் பெற்று காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்கினார். இதனிடையே அடையாள அட்டை இருந்தும் பார்வையற்ற கல்லூரி மாணவரிடம் கண்டக்டர் நடந்து கொண்ட விதம் சகபயணிகளிடையே அதிருப்தி ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் குணசேகரன் உத்தரவிட்டார்.