< Back
மாநில செய்திகள்
தறிகெட்டு ஓடிய கார் வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு
கடலூர்
மாநில செய்திகள்

தறிகெட்டு ஓடிய கார் வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
14 July 2022 5:47 PM GMT

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டிற்குள் கார் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு வேகத்தடை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேத்தியாத்தோப்பு,

மயிலாடுதுறை கீழமூவர்க்கரை பகுதியை சேர்ந்தவர் கோபி(வயது 42). இவர் தனது தங்கை அருள்மொழியுடன் திருவண்ணாமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

இவர்களது கார் நேற்று காலை கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, வளையமாதேவி அரிசி ஆலை அருகே ஒரு வீட்டில் கோலம் போட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது மோதியது.மேலும் அருகில் இருந்த அம்புஜவள்ளி என்பவரது வீட்டின் சுவரை உடைத்து மோதி நின்றது.

3 பேர் காயம்

இந்த விபத்தில் கோபி, அருள்மொழி மற்றும் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த ராஜேந்திரன் மனைவி சுமதி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் இதுபற்றி அறிந்த வளையமாதேவி கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது.

எனவே இங்கு விபத்து நடைபெறுவதை தடுக்க வேகத்தடை, பேரிகார்டு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்