< Back
மாநில செய்திகள்
சேலம் கோவிலுக்கு செல்லும் 1½ டன் தேர் வடம்
சிவகங்கை
மாநில செய்திகள்

சேலம் கோவிலுக்கு செல்லும் 1½ டன் தேர் வடம்

தினத்தந்தி
|
26 Jun 2023 7:04 PM GMT

சிங்கம்புணரியில் இருந்து சேலம் அயோத்திபட்டினம் ராமர் கோவிலுக்கு 1½ டன் தேர் வடம் கொண்டு செல்லப்படுகிறது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் இருந்து சேலம் அயோத்திபட்டினம் ராமர் கோவிலுக்கு 1½ டன் தேர் வடம் கொண்டு செல்லப்படுகிறது.

1½ டன் தேர் வடம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தென்னை அதிகளவு பயிரிடப்பட்டு உள்ளன. இதனால் இந்த பகுதியில் தென்னை நார்களை கொண்டு கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக சாரம் கட்டுவதற்காக கொச்சை கயிறு, விவசாயத்துக்கு தேவைப்படும் நாற்று கட்டும் கயிறு உள்ளிட்ட கயிறுகள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு தேர்வடம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் அயோத்திபட்டினம் ராமர் கோவில் தேருக்காக 100 அடி நீளமும் 13 இன்ச் சுற்றளவு கொண்ட பிரம்மாண்ட வடக்கயிறு தயாரிக்கும் பணி சிங்கம்புணரி சேவகப் பெருமாள் அய்யனார் கோவில் வளாகப் பகுதியில் தொடங்கி நடைபெற்றது. சுமார் 45 பணியாளர்கள் 7 நாட்களில் கடும் உழைப்பில் தயாரானது. இந்த பிரம்மாண்ட வடக்கயிறு சுமார் 1½ டன் எடை கொண்டது.

கடுமையான விரதம்

தென் தமிழகத்திலேயே சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் இந்தத் தேர் வடம் முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுவதாகும். தேங்காய் மட்டைகளிலிருந்து நார் உரித்து பக்குவம் செய்து கயிறாக திரித்து பின் வடக்கயிராக தயாரிக்கப்படுகிறது.

இது குறித்து கயிறு தயாரிப்பாளர் நல்லதம்பி கூறும் போது, இறைவன் திருப்பணியில் எங்கள் குடும்பத்தினர் நான்கு தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர் வடக்கயிறு என்பது இறைவனுக்கு செய்யும் தொண்டாகவே நினைத்து நாங்கள் பணிபுரிந்து வருகின்றோம்.

தேர் வடக்கயிறு தயாரிக்கும் போது தயாரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மாமிசம் உண்ணாமல் கடுமையான விரதம் இருந்து தேர் வடக்கயிறு தயார் செய்யும் பணியில் ஈடுபடுவர். அதன்படி சேலம் அயோத்திபட்டினம் ராமர்கோவிலுக்கு 1½ டன் எடையுள்ள தேர்வடம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அந்த தேர்வடம் லாரியில் சேலம் அயோத்திபட்டினத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது, என்றார்.

மேலும் செய்திகள்