< Back
மாநில செய்திகள்
தாலுகா அலுவலகம் முன்பு 9 குடும்பத்தினர் உண்ணாவிரதம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

தாலுகா அலுவலகம் முன்பு 9 குடும்பத்தினர் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
30 May 2022 6:57 PM GMT

நாட்டறம்பள்ளி அருகே வெளியூர் நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளதை ரத்து செய்து தங்களுடைய நிலத்தை மீட்டுத் தருமாறு 9 குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே வெளியூர் நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளதை ரத்து செய்து தங்களுடைய நிலத்தை மீட்டுத் தருமாறு 9 குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு மதுரா எலப்பள்ளி கிராமம் பீகி வட்டத்தில் சின்னப்ப கவுண்டர் என்பவருக்கு பட்டா வழங்கப்பட்டு பின்பு அவரின் வாரிசுகளுக்கு ஏற்ப சொத்துகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுமார் 100 ஆண்டுகளாக அனுபவத்தில் இருந்து வந்த 11 ஏக்கர் 90 சென்ட் நிலம் வேறு ஒரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனவே வெளியூர் நபர்களுக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்து தங்களுடைய சுவாதீனத்தில் இருக்கும் நிலத்தை மீட்டு தங்கள் பெயரிலேயே பட்டா வழங்க வேண்டும் என்று நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு சின்னப்பகவுண்டரின் வாரிசுகளான வேணுகோபால், காந்தி, ஜெயபாலன், முருகன் உள்ளிட்ட 9 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் தாசில்தார் பூங்கொடியை அலுவலகத்திற்கு வரவழைத்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக சம்பந்தப்பட்ட நிலத்தின் மீது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்