தஞ்சாவூர்
விவசாயியிடம் ரூ.7 லட்சம் மோசடி
|விவசாயியிடம் ரூ.7 லட்சம் மோசடி
கடன் தருவதாக குறுஞ்செய்தி அனுப்பி விவசாயியிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறுஞ்செய்தி
தஞ்சை மாவட்டம் புதுக்குடி தெற்கு நண்டாம்பட்டியை சேர்ந்தவர் பிச்சையா மகன் மனோகரன் (வயது 37). விவசாயி. இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு குறுஞ் செய்தி வந்துள்ளது. அதில் உங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்பட உள்ளதாகவும், மேலும் விவரங்களுக்கு குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று இருந்தது.
அந்த எண்ணை தொடர்பு கொண்டு மனோகரன் பேசினார். அப்போது அதில் பேசிய நபர் உங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் தொகை கிடைக்கும் என்றும், அதற்கு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ரூ.7 லட்சம் மோசடி
இதனை உண்மை என்று நம்பிய மனோகரன் பல தவணைகளாக மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சம் 18 ஆயிரத்து 900 செலுத்தியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. பணம் தன்னுடைய வங்கி கணக்கிற்கு வராததால் சந்தேகம் அடைந்த மனோகரன் மர்மநபரின் செல்போன் எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் தன்னிடம் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மனோகரன் தஞ்சை சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.