< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபர் கைது
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபர் கைது

தினத்தந்தி
|
27 Oct 2022 3:08 AM GMT

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை,

கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் கார் திடீரென்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஒருவர் பலியானார். அவர் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.

அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள ஜே.எம்.5 கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கைதான 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்