< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

தினத்தந்தி
|
28 Aug 2022 8:42 PM GMT

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டினர்.

மேலும் ராமேசுவரத்தை சேர்ந்த நிஷாந்தன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் மற்றும் படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் 6 பேரையும் மன்னார் கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை நிறுத்தம்

இந்தநிலையில் ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கைதான தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்தும், பாரம்பரிய கடல் பகுதியில் மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) ஒருநாள் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்