< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.74 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.74 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு

தினத்தந்தி
|
8 May 2024 6:58 AM GMT

தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.74 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 ஆக உள்ளது. இதில், ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985 பேர், பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரத்து 847 பேர், மூன்றாம் பாலினத்தனவர் 284 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவாரியான விவரம்:-

18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 23 லட்சத்து 63 ஆயிரத்து 129 பேர், 31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருப்போர் 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர், 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேர், 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 323 பேர்.

மாற்றுத்திறனாளிப் பதிவுத்தாரர்கள் விவரம்:-

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 ஆக உள்ளது. இதில், கை,கால் குறைபாடுடையோரில் ஆண்கள் 76 ஆயிரத்து 260 பேர், பெண்கள் 39 ஆயிரத்து 222 பேர்.

காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 586 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 582 பேர். பார்வையற்றோர் ஆண்கள் 12 ஆயிரத்து 567 பேர், பெண்கள் 5 ஆயிரத்து 766 பேர். அறிதிறன் குறைபாடு மற்றும் இதர குறைபாடுடையோர்களில் ஆண்கள் 1 ஆயிரத்து 375 பேர், பெண்கள் 445 பேர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்