< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்: வீட்டுமனை தருவதாக கூறி 500 பேரிடம் மோசடி செய்த 3 பேர் கைது
மாநில செய்திகள்

விழுப்புரம்: வீட்டுமனை தருவதாக கூறி 500 பேரிடம் மோசடி செய்த 3 பேர் கைது

தினத்தந்தி
|
8 July 2022 12:05 PM GMT

விழுப்புரம் அருகே வீட்டுமனை தருவதாக கூறி 500 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் காகுப்பம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி சித்ரா (வயது 43). இவர் விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் செய்தார்.

அதில், திருக்கோவிலூரை சேர்ந்த பரணிதரன், பாலாஜி, பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பழமலை நகரில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வந்தனர்.

இவர்கள் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 பேர்களிடமிருந்து மாதந்தோறும் பணம் வசூல் செய்தனர். இவ்வாறாக ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை பெற்று அதற்கான வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

பணத்தை கட்டிய பொதுமக்கள், பலமுறை அவர்களிடம் சென்று வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து தருமாறும், இல்லையெனில் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பித்தருமாறும் வற்புறுத்தி கேட்டனர்.

ஆனால் அவர்கள் 4 பேரும் வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து தராமலும் கட்டிய பணத்தை உரியவர்களுக்கு திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர், எனவே அவர்கள் 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்புகாரில் கூறியிருந்தனர்.

இதன் அடிப்படையில் பரணிதரன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பரணிதரன் (49), பாலாஜி (54), இளங்கோவன் (50) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் சென்னையில் உள்ள தமிழ்நாடு வைப்பீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பார்த்தசாரதியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்