< Back
மாநில செய்திகள்
2-வது திருமணம் செய்து வைக்க மறுத்த தொழிலாளி வெட்டிக்கொலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

2-வது திருமணம் செய்து வைக்க மறுத்த தொழிலாளி வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
22 Sep 2022 4:36 PM GMT

தானிப்பாடி அருகே 2-வது திருமணம் செய்து வைக்க மறுத்த தந்தையை வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

தண்டராம்பட்டு

தானிப்பாடி அருகே 2-வது திருமணம் செய்து வைக்க மறுத்த தந்தையை வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

கூலி தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகில் உள்ள மோத்தக்கல் ஊராட்சிக்குட்பட்ட குபேரப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 58), விவசாயக் கூலி தொழிலாளி.

இவருக்கு அன்னக்கிளி (48) என்ற மனைவியும் ராதிகா, மாலதி ஆகிய 2 மகள்களும், மணிகண்டன் (28), சக்திவேல் (25) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் பன்றி கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

ராதிகா, மாலதி, மணிகண்டன் ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது. சக்திவேலுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் அவருடன் வாழாமல் அவரது மனைவி ஒரு மாதத்திலேயே தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

எனவே சக்திவேல் தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் இன்றுமாலை சுமார் 4.30 மணி அளவில் வழக்கம் போல சக்திவேல் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி உள்ளார். மேலும் இவர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தையும் தனது பெயருக்கு எழுதிதரும் படி கேட்டுள்ளார்.

அதற்கு சகாதேவன் மறுத்துவிட்டு, இன்னும் 3 ஆண்டுகளுக்கு பின்பு தான் திருமணம் நடத்த முடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு 2 மகன்களும் சேர்ந்து சகாதேவனை மண்வெட்டி மற்றும் கொடுவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதில் சகாதேவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

2 மகன்கள் கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தந்தையை வெட்டிக்கொன்ற மணிகண்டன், சக்திவேல் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலையில் அன்னக்கிளிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்