< Back
மாநில செய்திகள்
பெரம்பலூரில் 2-வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்ட நிகழ்ச்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் 2-வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்ட நிகழ்ச்சி

தினத்தந்தி
|
4 Jun 2023 6:30 PM GMT

பெரம்பலூரில் 2-வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை பொதுமக்கள் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் சென்னை, கோவை பெரு மாநகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் (மகிழ்ச்சி தெரு) என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பெரம்பலூர் நகரிலும் மாவட்ட போலீசார் சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்ட நிகழ்ச்சி கடந்த மாதம் 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. 2-வது வாரமாக நேற்றும் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்ட நிகழ்ச்சி மாலையில் நடத்தப்பட்டது. இதில் போலீசார், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் பாடலுக்கு ஏற்ப உற்சாகமாய் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, சிறுவர், இளைஞர்களின் தப்பாட்டம், பள்ளி மாணவ-மாணவிகளின் சிலம்பாட்டம், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. பொதுமக்கள் பாட்டு பாடியும், கவிதை வாசித்தும் தங்களுக்கு உள்ள திறமைகளை உற்சாகமாய் வெளிப்படுத்தியதை காணமுடிந்தது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பெரம்பலூர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், போதை பழக்க வழக்கங்களில் அடிமையாவதை தவிர்க்குமாறும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு போலீசார் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்