< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில் 2-வது நாள் ஜமாபந்தி:  பொதுமக்களிடம் இருந்து 64 மனுக்களை கலெக்டர் பெற்றார்
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் 2-வது நாள் ஜமாபந்தி: பொதுமக்களிடம் இருந்து 64 மனுக்களை கலெக்டர் பெற்றார்

தினத்தந்தி
|
26 May 2022 12:53 PM GMT

பரமத்திவேலூரில் 2-வது நாளில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 64 மனுக்களை கலெக்டர் ஸ்ரேயா சிங் பெற்றார்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் 2-வது நாளில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 64 மனுக்களை கலெக்டர் ஸ்ரேயா சிங் பெற்றார்.

பட்டா மாறுதல்

பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் 2-வது நாள் ஜமாபந்தி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். பரமத்திவேலூர் வட்டம் கபிலக்குறிச்சி, எளம்பள்ளி, இ.நல்லாகவுண்டம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம், கொத்தமங்கலம், வடகரையாத்தூர் மேல்முகம், அக்ரஹார குன்னத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 64 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து விண்ணப்பித்த ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக பட்டா மாறுதலுக்கான ஆணைகளை 5 பேருக்கு கலெக்டர் வழங்கினார்.

வேளாண்மை துறை

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை பதிவேடு, பிறப்பு இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு, கிராம பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை தனித்தனியே பார்வையிட்டு சரிபார்த்தார். வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, புள்ளியியல் துறை அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் வைத்துள்ள பதிவேடுகளில் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படுவதை கலந்தாலோசனை மூலம் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதில் பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், பரமத்தி வேலூர் மண்டல துணை தாசில்தார் சித்ரா உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்