< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்  காரணம் என்ன? போலீசார் விசாரணை
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் காரணம் என்ன? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
4 July 2022 2:00 PM GMT

நாமக்கல்லில் காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்லில் காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீ விபத்து

நாமக்கல்- துறையூர் சாலையில் கொசவம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய பட்டறைக்கு அருகே சம்பூரணம் என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் 'கன்சல்டிங்' நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் நிதி நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்களை வாங்கி, பட்டறையின் பின்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். சுரேசும் தனது பட்டறைக்கு வரும் இருசக்கர வாகனங்களை அங்கு நிறுத்தி வைப்பார் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பணி முடிந்ததும் சுரேஷ் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது.

28 இருசக்கர வாகனங்கள் சேதம்

இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பல இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

இதுகுறித்து பட்டறை உரிமையாளர் சுரேஷ், சம்பூரணம் ஆகியோர் நாமக்கல் போலீசில் புகார் செய்தனர். அதில் 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்து இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் ரூ.17½ லட்சம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா

தொழில் போட்டி காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. எனவே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்