< Back
மாநில செய்திகள்
நூடுல்ஸ்  சாப்பிட்ட  2 வயது குழந்தை உயிரிழப்பு - திருச்சியில் பரபரப்பு
மாநில செய்திகள்

நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு - திருச்சியில் பரபரப்பு

தினத்தந்தி
|
19 Jun 2022 12:44 PM GMT

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளிடம்,

திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாய்தருண் என்ற ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை சாய்தருக்கு உடல் அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு தாய் மகாலெட்சுமி சாய் தருணிற்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துவிட்டு மீதமுள்ள நூடுல்ஸை குளிர்சாதன பெட்டி வைத்துள்ளார். மறுநாள் காலை மகாலெட்சுமி குழந்தைக்கு மீண்டும் காலை உணவாக நூடுல்ஸை எடுத்து கொடுத்துள்ளார்.

இதனை உண்ட குழந்தை அன்று மதியம்வரை வேறு எந்த உணவையும் உண்ணாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அன்று மாலை குழந்தை திடீரென வாத்தி எடுத்து சுருண்டு கீழே விழுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் மகாலெட்சுமி குழந்தையை தூக்கிக்கொண்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு துரித உணவான நூடுல்ஸை உண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்