< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பெண்கள் கருகிச்சாவு

தினத்தந்தி
|
25 July 2023 8:34 PM GMT

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

தாயில்பட்டி,

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டி கிராமத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற ரோல் கேப் வெடி தயாரிக்கும் ஒரு பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் 40 அறைகள் உள்ளன. இங்கு 60-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நவீன முறையில் ரோல் கேப்வெடி தயாரிப்பதற்காக ஒரு வகையான புதிய எந்திரம் சில தினங்களுக்கு முன்பு நிறுவப்பட்டதாம்.

2 பேர் பலி

அந்த எந்திர அறையில் நேற்று மண்குண்டாம்பட்டி ஓ.பி.ஆர். நகரை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மனைவி பாலசரசுவதி (வயது 39), சிவகாசி அருகே உள்ள விசுவநத்தம் முனியசாமி கோவில் தெரு ராமர் மனைவி முருகலட்சுமி (37), அழகு லட்சுமி, பாக்கியலட்சுமி, ராதா, ெரங்கநாயகி, அன்னத்தாய் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

மதியம் 12.30 மணி அளவில் ரசாயன மருந்து கலக்கும் பணியில் பால சரசுவதி, முருகலட்சுமி ஆகிய 2 பேரும் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உராய்வு காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. உடனே தீப்பற்றி பரவியதில் பாலசரசுவதி, முருகலட்சுமி ஆகிய 2 பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த மற்ற பெண்கள் உடனடியாக வெளியே ஓடி உயிர்தப்பினர். அருகில் மற்ற அறைகளில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களும் அவசரம் அவசரமாக வெளியேறிவிட்டனர். இதனால் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

உடல்கள் மீட்பு

சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து செந்தூர் பாண்டி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். பலியான 2 பெண்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறினர். உடல்கள் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், சாத்தூர் துணை சூப்பிரண்டு வினோஜி, வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் மற்றும் சிவகாசி தாசில்தார் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை போர்மேன் கண்ணன் (45) கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த பாலசரசுவதிக்கு பொன் பிரியா, பரமேசுவரி என 2 மகள்களும், மாணிக்க விஜய் என்ற மகனும் உள்ளனர். முருகலட்சுமிக்கு சதீஷ்குமார், சபிதா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்