< Back
மாநில செய்திகள்
தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு
விழுப்புரம்
மாநில செய்திகள்

தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு

தினத்தந்தி
|
20 Oct 2022 6:45 PM GMT

திண்டிவனம் பகுதியில் நடந்த தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திண்டிவனம் அருகே வைடப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்து மகன் கார்த்திக் (வயது 33). இவர் மோட்டார் சைக்கிளில் குருவம்மா பேட்டை காலனி அருகே உள்ள பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கே திடீரென ஒரு நாய் சென்றதாக தெரிகிறது. நாய் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே காட்டு மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் பிரசாந் (20). இவர் தனது தாய் மஞ்சுவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திண்டிவனம் இருதயபுரம் மெயின் ரோட்டில் சென்றார். அப்போது திடீரென குறுக்கே வந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சு பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்