< Back
மாநில செய்திகள்
தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு
விழுப்புரம்
மாநில செய்திகள்

தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு

தினத்தந்தி
|
24 July 2022 5:29 PM GMT

செஞ்சி பகுதியில் நடந்த தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

செஞ்சி,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே கானலாபாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரமோத் (வயது 22). இவர் தனது உறவினர் மகாவிஷ்ணுவுடன் (23) திண்டிவனத்தில் இருந்து கீழ்பெண்ணாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செஞ்சி-திண்டிவனம் சாலையில் ஊரணித்தாங்கள் கோர்ட் வளாகம் அருகில் சென்ற போது எதிரே வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரமோத் பரிதாபமாக இறந்தார். மகாவிஷ்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

செஞ்சி அருகே காட்டுசித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் சின்னதுரை (38) விவசாயி. இவர் தனது ஊரிலிருந்து மோட்டார் சைக்கிளில் கீழ் பெண்ணாத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னதுரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்