< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
12 Sep 2022 6:52 PM GMT

சென்னை விமான நிலையத்தில் ரூ.89 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 989 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த அஸ்பக் உசேன் (வயது 30) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.55 லட்சத்து 96 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 249 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 கிலோ தங்கம் பறிமுதல்

அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு அந்த விமானத்தில் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். விமானத்தின் கழிவறையில் ஒரு பார்சலில் தங்கம் இருப்பதை கண்டனர். ரூ.33 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 740 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

துபாயில் இருந்து அதனை கடத்தி வந்த பயணி, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து தங்கத்தை விமான கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.89 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 989 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த அஸ்பக் உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்